தான் ஒரு முஸ்லீம் என்னும் அடையாளம் சுமக்க நேரிடுவதன் துயரங்களைத் தான் ஷாருக் திரைப்படங்களாக எடுக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் இன்னொரு படம். “ச்சக் தே” – இந்தியாவில் முஸ்லீமாக இருப்பதன் தொந்தரவுகளும், இதில் மேற்குலகில் முஸ்லீமாக இருப்பதன் தொந்தரவுகளுமே கதைக் களன்.
ஃபாக்ஸ் என்னும் ஹாலிவுட் நிறுவனம் தயாரித்துள்ள படம். கரண் ஜோஹரும், ஷாருக் கானும் சேர்ந்து.
ஷாருக்கானும் காஜோலும் பல காலம் சென்ற பின்னர் ஜோடி சேரும் படம். கரண் ஜோஹர் பாலிஉட்டின் மில்ஸ் அண்ட் பூன் படங்கள் செய்யும் இயக்குநர். இவர் படத்தில் வரும் கிளிஷேக்களைத் தொகுத்து ஒரு கலைக்களஞ்சியமே வெளியிடலாம். ரவி கே சந்திரன் என்னும் நட்சத்திர ஒளிப்பதிவாளரும் சேர்ந்த கூட்டணி.
அந்தக் காலத்து நடிகைகள் ஓவர் ஆக்டிங் செய்யும் அழகைக் காண விரும்பும் ரசிகர்கள் 30 ரூபாய் கொடுத்து dvd வாங்கிப் பார்த்துக் கொள்ள முடியும். அவர்களை அழைத்து வந்து இன்றைய படங்களில் நடிக்க வைத்து, நம்மைப் பார்க்க வைப்பதை spca வில் புகார் செய்ய வேண்டும். “நெம்ப” கஷ்டம். படத்தின் முதல் 15 நிமிடங்கள் ரசிகன் படத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் நேரம் – ஜரீனா வஹாப் என்னும் அந்தக் கால இந்தி சரோஜா தேவி அந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடிக்கிறார். இது படத்துக்கு பெரும் நஷ்டம்.
வெற்றிகரமான நடிகையாக இருந்த காலத்தில் இருந்ததை விட மிக அழகாகத் தன் உடலைப் பராமரித்திருக்கிறார் காஜோல். அழகிய பெரும் கண்களும், துறு துறு ஆளுமையும், ஆஸ்பெர்கர் ஸிண்ட்ரோமினால் பாதிக்கப் பட்டு உணர்வுகளை வெளிப்படையாகக் காண்பிக்கத் தெரியாத ஷாருக் கானுக்கு சரியான complement. ஷாருக்கின் நடிப்பு, dustin hoffman இன் rain man ஐயும், forest gump ஐயும் நினவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் , இது ஷாருக்கின் ஒரு கடும் முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
1993 மும்பை இந்து முஸ்லீம் கலவரம், 9/11 உலக வர்த்தக இரட்டைக் கோபுர நாசம், ஓபாமா என்னும் ஆப்ரோ அமெரிக்க அதிபர் என்னும் உலக சரித்திர ஊசிகளுனூடே நூலாய் கதாநாயகனின் வாழ்க்கையைப் பிணைத்திருக்கிறார். ஆனால் ஒரு ஒத்திசைவான நிகழ்வாய்த் திரைக்கதையில்லை. மூன்று க்ளைமேக்ஸ்களைத் தாண்டி இறுதிக் க்ளைமேக்ஸ் வருவதற்குள், போதும்டா சமி என்றாகிவிடுகிறது.
காட்சிகளைப் படமாக்கிய விதம் மிக நன்றாக இருக்கிறது. இது கரண் ஜோஹரின் பலம். நிகழ்வுகளை, மனதில் தன் உயிர் மந்திராவுடன் ஷாருக் நிகழ்த்தும் உரையாடல்களாக அமைத்திருப்பது மிக அழகான உத்தி. உணர்வுகளை வெளியே சொல்லத் தெரியாமல் அதே சமயம் அதில் தன் மனதைச் சொல்கிறது ஷாருக்கின் குரல். படத்தில் மனதை நெகிழ்த்தும் விஷயம் இவ்வுரையாடல்களே.. ஆனால், படம் முழுதுமே நல்ல காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான் குறை. திரைக்கதையின் திருப்பங்களில், ட்ராபிக் சிக்னல் போர்ட் மட்டும்தான் இல்லை.
பல இடங்களில், இடம் சுட்டிப் பொருள் விளக்கும் உத்தியும், க்ளிஷேக்களும் (கறுப்பர்களோடு சேர்ந்து பாடும் we shall overcome; குரான் மொழிகள் கேட்டு வெறுப்புடன் விலகும் அமெரிக்கர்கள்; கதாநாயகன் – நாட்டில் வெள்ளத்தின் போது ஏழைகளுக்கு உதவுவது – அதன் மூலம் மக்களினூடே அவர் பிரபலமாவது..) இயக்குநரின் திறன் போதாமையைக் காடுகிறதா அன்றி இந்திய சினிமா வர்த்தக நெருக்கடியா என்று தெரியவில்லை – silly.
பிண்ணனி இசை ஆறுதல். படத்தில் பொது ஜனத் தளத்தின் உணர்வுகளைச் சொல்கிறது. மிகவும் அதிகமாக மெலோடிக். ரவி கே சந்திரனின் கேமரா கதையின் ஒட்டத்துடன் செல்கிறது – மிக அற்புதம் என்று சொல்ல முடியாது – ஆனால் சில இடங்களில் லைட்டிங் – ஷாருக் தனியே வீட்டின் ஒரு அறையில் அமர்ந்திருக்கும் காட்சியின் லைட்டிங் வெகு அழகு. பஸ்ஸில் பயணம் செய்யும் ஷாருக்கை அதன் ஓட்டத்தோடே பிடித்திருப்பதும் அழகு.
கொஞ்சம் கூர்மையான திரைக்கதையோடு இசையையும், காமிராவையும் துணையாய்ச் சேர்த்துக் கொண்டு ஒரு காவியம் படைத்திருக்கலாம். வாய்ப்பு தவற விடப் பட்டிருக்கிறது.
படம் வெளியிடும் முன் திரை ஆளுமைகளை மிரட்டி பொருள் நஷ்டம் ஏற்படுத்தும் உத்தியை சிவ சேனைக் கையாள முயற்சித்தது. மும்பை அதை வெகுவாகக் கண்டு கொள்ளவில்லை என்பது ஆறுதல். அது போன்ற குறுகிய அரசியல் நோக்கங்களுகெதிராக ஒரு ஓட்டுப் போட அவசியம் பார்க்க வேண்டிய படம்.
சமீப காலங்களில் இந்தியத் திரைப் படங்களில் மிக அதிகமாக அமெரிக்கா தென்படுகிறது.. இப்படியே போனால இன்னும் சில வருடங்களில் கே.எஸ். ரவிக்குமார் அமெரிக்காவை வைத்து ஒரு படம் எடுக்கக் கூடும் சாத்தியங்கள் மனதுள் பீதியை வளர்க்கக் கூடியவை. வெள்ளை மாளிகைப் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, வெள்ளி மீசையுடன், வெற்றிலை, வெங்கலச் சொம்பு சகிதமாக, முழங்கால் மீது கையை வைத்துக் கொண்டு, சரத்குமார், “ஏண்டா சின்ராசு, பராக் ஓபாமா என்றா சொல்றான்” என்று கேட்பது போல் ஒரு கற்பனை மனதுள் எழுகிறது. Possible..

Leave a comment
Comments feed for this article